நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? – அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்! 

  நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? – அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்! 

 தி கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தில் எனது கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் இருப்பதாக நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை:90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். இவரது படங்கள் தற்போது வரையிலும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்த நாளை தனது ரசிகர்கள் உடன் கொண்டாடினார்.மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தலைக்கவசம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த், அவரது அப்பா தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் நடித்த அந்தகன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு இவருக்குச் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கூறியதாவது, “தனது பிறந்தநாளுக்குக் கோட் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. போஸ்டர் பார்க்கும் போதே த்ரில்லிங்காக உள்ளது. அதைப் பார்த்து நிறையப் பேர் எனக்கு போன் செய்து பாராட்டினார்கள். அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் தான் காரணம் அவர்களுக்கு நன்றி.

படத்தில் எனது கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் இருப்பதாகக் கூறியதற்கு நல்ல விஷயம் தானே. படம் பாருங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுவீங்க. அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் உள்ளது. அந்தகன் திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அது நல்ல தேதியில் வெளியானால் தான் மக்களை சென்றடையும் விரைவில் வெளியாகும்.நிறைய இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லி வருகிறார்கள். விரைவில் அனைவரது ஆசையும் பூர்த்தியாகும். தலைக்கவசம் அணியாமல் நிறையப் பேர் விபத்தில் உயிரிழக்கின்றனர். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலவசமாகத் தலைக்கவசம் வழங்கி அதுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன்” என்றார்.பின்னர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, அந்த கேள்வி என் காதில் விழாது என்றார். மேலும், விஜய் வாழ்த்தினாரா என்ற கேள்விக்கு, அவர் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் என்றார்.